"தலைவலியும், பல்வலியும் உனக்கு வந்தால் தான் தெரியும்” என்பார்கள். இதற்குக் காரணம் அந்த வலியை அனுபவித்தால் தான் அதன் கொடுமை விளங்கும்.
மைகிரைன் தலைவலி என்னும் ஒற்றைத் தலைவலி மிகவும் கொடுமையானது. இதற்கான தீர்வைத் தான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது, சைக்கிளை எடுத்துக் கொண்டு தினமும் கொஞ்ச நேரம் உற்சாகமாய் ஓட்டுங்கள். சில மாதங்களிலேயே உங்கள் தலைவலி பறந்து போய்விடும் என சொல்லி வியக்க வைக்கின்றனர் ஸ்வீடன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள்.
கடந்த சில மாதங்களாக தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்த நபர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தான் இந்த முடிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி செய்தால் தலைவலி அதிகமாகி விடும் எனும் தவறான கருத்தில் பலரும் உடற்பயிற்சி செய்ய மறுத்து வருகின்றனர்.
ஆனால் உண்மையில் சைக்கிள் ஓட்டும் பயிற்சியானது தலைவலி வரும் வாய்ப்பை 90 விழுக்காடு வரை குறைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். இதற்கு காரணம்,நீங்கள் சைக்கிள் ஓட்டும் போது உங்கள் உடலில் எண்டோர்பின்கள் அதிகமாக சுரக்கின்றன. எண்டோர்பின்கள் வலி நிவாரணியாக செயல்படும் என்பதால் தலைவலி வராமலும் அது தடுத்து விடுகிறது என மருத்துவ விளக்கமும் அளிக்கின்றனர்.