புகைத்தால் புற்றுநோய் மட்டுமல்ல பார்வையும் பறி போகிறதாம். சமீபத்திய ஆய்வின் எச்சரிக்கை இது.
தீய பழக் கங்கள் தீயைப்போல வேகமாகப் பரவுகின்றன. முலை முடுக்குகளிளெல்லாம் சிகரெட், பாக்கு வகைகள் விற்கும் பெட்டிக்கடை காட்சி அளிக்கின்றன. புகைப்பதால் ஏற்படும் தீமைகளும் நாம் அறியாதவைகள் இல்லை. இருந்தும் பலர் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்பதைத்தான் இவை காட்டுகின்றன.
புகைக்கும் பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பது பலருக்கும் தெரிந்ததுதான். ஆனால் பின்னாளில் பார்வையும் பறிபோகும் வாய்ப்பு இருக்கிறது என்கிறது புதிய ஆய்வு.
அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக குழுவின் ஆய்வில் இது தெரியவந்துள்ளது. 2 ஆயிரம் முதாட்டிகளை ஆய்வு செய்தனர். (அங்கு ஆண்/பெண் பேதமில்லாமல் புகைப்பழக்கம் உண்டு) இவர்கள் 78 முதல் 83 வயதுக்கு உட்பட்டவர்கள்.
ஆய்வு முடிவில் புகைப்பழக்கம் உடையவர்களுக்கு வயதான பிறகு பார்வை இழக்கும் ஆபத்து உயர்ந்திருந்தது தெளிவானது. இவர்கள் ஏ.எம்.டி. என்ற பார்வைக்கோளாறால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
ஏ.எம்.டி. என்பது வயதானவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடாகும். மாக்யுலா எனப்படும் பார்வை செல்கள் மீண்டும் உற்பத்தி ஆவது 70 வயதுக்கு மேல் குறைவதால் இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதில் புகைப்பழக்கம் உடையவர் களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
ஆய்வின்படி புகைப்பழக்கம் இல்லாதவர்களைவிட புகைப்பவர்களில் 11 சதவீதம் பேர் ஏ.எம்.டி. பாதிப்பால் பார்வை இழக்கிறார்கள்.
புகைப்பழக்கம் இருப்பவர்கள் 70 முதல் 80 வயதை கடக்கும்போது மற்றவர்களைவிட 5 மடங்கு வேகமாக ஏ.எம்.டி. பாதிப்புகள் ஏற்படுகிறது.
இத்தகைய கொடிய துன்பத்தைத் தரும் பழக்கத்தை ஆரம்பத்திலே கிள்ளி எறிவதுதான் சிறந்தது என்று டாக்டர்கள் மீண்டும் எச்சரிக்கை செய்கிறார்கள்.