தற்போதைக்கு உலகில் 40 லட்சம் மக்கள் எயிட்ஸ் வைரசுக்கு எதிரான மருந்துகளை பெறுகிறார்கள். ஆனால், இன்னும் ஒரு 50 லட்சம் பேரைப் பொறுத்தவரை அவர்களுக்கு சிகிச்சை தேவைப்படுகின்ற போதிலும், இந்த மருந்து அவர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை.
எச்.ஐ.விக்கு எப்போது சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும் என்பது குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளை எடுத்துக்கொண்டால், மேலும் 30 தொடக்கம் 50 லட்சம் பேர் சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் இணைகிறார்கள் என்று அது பொருள் தருகிறது.
எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டவர்கள் அவர்களது நோய் எதிர்ப்பு தொகுதி, பலவீனமடைந்து அதற்கான சமிக்ஞைகள் தென்படத்தொடங்குவதற்கு முன்னதாக மருந்துகளைப் பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் விரும்புகிறது.
புதிதாக பரிந்துரைக்கப்பட்ட மட்டத்தில் சிகிச்சையை ஆரம்பித்தால், இந்த நோயின் எதிர்ப்பில் இருந்து தாக்குப் பிடிப்பவர்களின் அளவு 70 வீதத்தால் அதிகரிக்கும் என்று மருத்துவ சஞ்சிகையான லான்சட் காண்பிக்கிறது.
இது சுகாதார பராமரிப்பு துறையின் செலவையும் கணிசமாக அதிகரிக்கச் செய்யும்.
உலகில் எயிட்ஸ் மிகவும் மோசமாக தொற்றியுள்ள நாடுகளில் ஒன்றான தென்னாபிரிக்காவைப் பொறுத்தவரை, அங்கு தற்போது சிகிச்சை தேவைப்படுபவர்களில் அரைவாசிக்கும் குறைவானவர்களே அதனைப் பெறுகிறார்கள்.
இந்த புதிய பரிந்துரைகளின் மூலம் மேலும் 10 லட்சம் தென்னாபிரிக்கர்கள் சிகிச்சைக்காக காத்திருப்போரின் பட்டியலில் இணைவார்கள் என்று சிகிச்சை கோரி செயற்படும் தன்னார்வக்குழுவைச் சேர்ந்த கத்தரின் தொம்லின்சன்.