November 29, 2009

கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை

இணையத்தின் பெரும் சக்தியான கூகிள் தனது புதிய இயங்குதளமான கூகிள் குரோம் ஓஎஸ்சை திறந்த வெளி (Open Source) மென்பொருளாக 19 நவம்பர் 2009 அன்று அறிமுகப்படுத்தி உள்ளது. கூகிள் புதிய இயங்குதள தயாரிப்பில் ஈடுபட்டு இருப்பதாக அதற்கு கூகிள் குரோம் ஓஎஸ் என்று பெயரிட்டு கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. நேற்று அதற்கான திறந்தவெளி நிரலை வெளியிட்டு உள்ளது.

கூகிள் குரோம் ஓஎஸ் என்பது என்ன? அது என்னவெல்லாம் சேவை வழங்க போகிறது என்பதை சற்றே விளக்கமாக பார்ப்போம்.

கணினியை பொறுத்தவரை சராசரி பயனர் என்ன பயன்பாடுகளுக்கு உபயோகிக்கிறார்? நம்மையே எடுத்து கொள்ளுவோம். கணினியை துவக்கிய பின் நேரடியாக இணைய உலாவியை திறந்து கொள்ளுகிறோம். ஈமெயில், யூடியுப், நண்பர்களுடன் அரட்டை, தளங்களை வாசித்தல் என்று பெரும்பாலும் நமது நேரத்தை இணையத்தில் செலவு செய்கிறோம். முடிந்தவுடன் இணைய உலாவியை மூடி விட்டு கணினியை சட்டவுன் செய்து விடுகிறோம். நமது பெரும்பாலான நேரம் இணைய உலாவியில் தான் செலவாகிறது. கணினியில் உள்ள மற்ற ப்ரோக்ராம்களை மென்பொருள்களை உபயோகிப்பது என்பது மிக குறைவே.





இந்த விஷயத்தை தான் கூகிள் தனது குரோம் ஓஎஸ் இயங்குதளத்திற்கு மூல மந்திரமாக எடுத்து உள்ளது. பெரும்பாலும் மற்ற மென்பொருள்களை உபயோகிக்காத போது அவற்றை கணினியில் ஏன் அடைத்து வைக்க வேண்டும்? வைரஸ் பாதுகாப்பு என்று ஏன் பயனரை சிக்கலுக்கு உள்ளாக்க வேண்டும்?

கூகிள் குரோம் ஓஎஸ்சை பொறுத்தவரை நீங்கள் உங்கள் கணினியில் எதையுமே நிறுவ தேவை இல்லை. அனைத்துமே இணைய அப்ளிகேஷன்கள்தான். அவை மென்பொருள் நிறுவனங்களில் செர்வரில் பாதுகாப்பாக இருக்கும். கூகிள் குரோம் ஓஎஸ் கணினியை திறந்தவுடன் அது இணையத்திற்கு சென்று விடும்.

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு ஆவணத்தை உருவாக்க, எடிட் செய்ய வேண்டும். சாதரணமாக நீங்கள் மைக்ரோசாப்ட் வோர்ட் உபயோகித்து வந்து இருப்பீர்கள். கூகிள் குரோம் ஓஎஸ்சை பொறுத்தவரை இணையத்தில் அதற்கான ஒரு அப்ளிகேஷன் வழங்கப்படும் அதனை நீங்கள் உபயோகித்து கொள்ளலாம். உதாரணத்திற்கு கூகிள் டாக்ஸ். http://docs.google.com/ . மற்றும் விண்டோஸ்சில் .EXE கோப்பு போன்று இங்கு எதனையும் இயக்க முடியாது. அதற்கான தேவையும் இங்கு இல்லை.


இது போன்று உங்கள் பெரும்பாலான தேவைகளுக்கு (படங்கள் உருவாக்குதல், வீடியோ உருவாக்குதல் உள்ளிட்ட) இணையத்தில் உள்ள அப்ளிகேஷன்கள் வழங்கப்படும். எதையும் நீங்கள் கணினியில் நிறுவி வைத்து கொள்ள தேவை இல்லை. உபயோகித்த பின்பு நீங்கள் உருவாக்கும் கோப்புகளை நீங்கள் இணையத்திலே சேமித்து வைக்கலாம். அல்லது உங்கள் USB, மெமரி கார்டு போன்றவற்றில் சேமித்து கொள்ளலாம். சுருங்க சொல்ல வேண்டும் எனில், உங்கள் கோப்புகளை கூகிள் , மென்பொருள் நிறுவனங்களே இணையத்தில் பாதுகாக்க போகிறது. நீங்கள் உலகின் எங்கிருந்து வேண்டுமானாலும் அவற்றை அணுகி கொள்ளலாம்.

இதன் சாதகங்கள் என்ன என்று கூகிள் சொல்வதை பார்ப்போம்.

1. கூகிள் குரோம் ஓஎஸ்சின் தாரக மந்திரம் வேகம், எளிமை மற்றும் பாதுகாப்பு (Speed, Simplicity, and Security) .

வேகம் : கூகிள் குரோம் ஓஎஸ் அதி வேகத்தில் திறக்கும் என்கிறார்கள். தற்போது ஏழு வினாடிகளில் பூட் ஆகிறது.

எளிமை : கூகிள் குரோம் திறந்தவுடன் இணைய உலாவிதான் எல்லாம். அதிலேயே அனைத்தும் இருக்கும். இணைய உலாவியை உபயோகிக்க தெரிந்து அனைவரும் எளிமையாக கூகிள் குரோம் உபயோகிக்கலாம். கூகிள் குரோம் ஓஎஸ் பயன்பாடு குறித்த இந்த வீடியோவை பாருங்கள்.

பாதுகாப்பு : அனைத்து அப்ளிகேஷன்களும் இணைய மென்பொருள்கள் என்பதால், எந்த மென்பொருளும் உங்கள் கணினியில் நிறுவுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட வில்லை. இதனால் வைரஸ், அட்வேர் போன்ற தாக்குதலுக்கு வாய்ப்பில்லை. கூகிள் குரோம் ஓஎஸ் பாதுகாப்பு குறித்த இந்த வீடியோ பாருங்கள்.

2. கூகிள் குரோம் ஓஎஸ், தோற்றத்தில் குரோம் இணைய உலாவியை போன்றே இருக்கும். இடது புறத்தில் இணைய அப்ளிகேசன்களுக்கு என்று தனியே ஒரு டேப்(Tab) இருக்கும். ஒவ்வொரு இணையதளத்தையும் நீங்கள் தனித்தனி டேப்களில் திறந்து பார்ப்பது போன்று கூகிள் அப்ளிகேஷன்களை தனித்தனி டேப்களில் திறந்து வேலை செய்து கொள்ளலாம்.

3. கேமராவில் / மொபைலில் வைத்துள்ள புகைப்படங்கள், கோப்புகள் போன்றவதை அணுக நீங்கள் அவற்றை கணினியுடன் இணைத்து இணையத்தில் நேரடியாக ஏற்றி வேலைகளை செய்து கொள்ள முடியும்.

கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. கூகிள் குரோம் ஓஎஸ்சை எப்படி வாங்குவது, கணினியில் எப்படி நிறுவுவது?

கூகிள் குரோம் ஓஎஸ்சை தனியே DVD யில் வாங்கி கணினியில் நிறுவுவது என்ற வேலை இல்லை. நேரடியாக கூகிள் குரோம் ஓஎஸ் கணினிகலாகவே வாங்க வேண்டியதுதான். உதாரணத்திற்கு நாம் மொபைல் வாங்கும் பொழுது அந்த நிறுவனத்தின் இயங்குதளத்துடன் அனைத்தும் நிறுவியே வருமே அது போல. கூகிள் குரோம் கணினிகள் என்று தனியே விற்பனைக்கு வரும். இதற்கான முயற்சிகளை இன்டெல், அசுஸ், HP போன்ற நிறுவனங்களுடன் கூகிள் எடுத்து வருகிறது. விண்டோஸ் போல நீங்கள் கூகிள் குரோம் ஓஎஸ்சை அனைத்து கணினிகளிலும் நிறுவி கொள்ள முடியாது.

கூகிள் குரோம் ஓஎஸ் எப்பாது வர போகிறது. இன்னும் ஒரு வருடத்தில் பயனர்களுக்கு கிடைக்கும் என்று காலம் நிர்ணயித்து உள்ளார்கள். இது ஆரம்பத்தில் டெஸ்க்டாப் கணினிகள், லேப்டாப் கணினிகளுக்கு வர போவது இல்லை. நெட்புக் கணினிகளுடன் மட்டும் ஆரம்பத்தில் வரும். நாளடைவில் அனைத்து விதமான கணினிகளுக்கும் விரிவு படுத்தப்படும்.

நெட்புக் கணினிகள் என்பது சிறிய அளவிலாக லேப்டாப்கள் ஆகும். எட்டு முதல் 11 இன்ச் திரைகளுடன் எங்கும் எளிதில் கொண்டு சென்று உபயோகிக்கும் படி சிறிய அளவில் வருகின்றன. இவை மிகவும் அதிகமாக பரவி வருவதால், இதன் தேவை அதிகரித்து இருப்பதால் கூகிள் இங்கிருந்து ஆரம்பிக்கிறது.

ஓகே. இது என்ன விலை இருக்கும். மிக குறைந்த அளவில் வரலாம். கூகிள் கூறுவதை பார்த்தால் இந்த கணினியில் ஹார்டுடிஸ்க்கே தேவைப்படாது. நமது இந்திய ரூபாயில் பதினைந்தாயிரம் விலையில் ஆரம்பிக்கலாம். தொலைகாட்சி பெட்டிகள் போன்று கூகிள் குரோம் ஓஎஸ் பெட்டிகள் இல்லங்களில் ஆக்ரமிக்கலாம்.

இதனுடைய நீட்சி எந்த அளவில் இருக்கும்? மென்பொருள் நிறுவனங்கள், மென்பொருள்களை விற்பதுடன் மென்பொருள்களை இணையத்தில் வாடகைக்கு விடும் சேவையை வழங்கலாம். உதாரணத்திற்கு ஒரு புகைப்படத்தில் வேலை செய்ய உங்களுக்கு போட்டோஷாப் மென்பொருள் தேவை படுகிறது. அதன் விலை பல லட்சம் ரூபாய்கள். அதை எந்நேரமும் உபயோகிக்க போவதில்லை. சில மணி நேரங்கள் மட்டுமே தேவை படுகிறது. இது போன்ற சூழல்களில் நீங்கள் அந்த மென்பொருளை இணையத்தில் சில மணி நேரங்கள் உபயோகித்து கொள்ள முடியும். அதற்கு சிறிய அளவு வாடகை மட்டும் வசூலிப்பார்கள். இந்த கட்டணம் கூட உங்கள் தொலைபேசி, இணைய பில்களில் வரும் அளவு அதன் மூலம் செலுத்தும்படி இதன் பயன்பாடுகள் நீளலாம்.

இந்தியாவில் இது எந்த அளவுக்கு எடுபடும்? இந்தியாவில் இணைய இணைப்பு என்பது இன்னும் தடுமாற்றத்தில்தான் உள்ளது. மொபைல் போன்களை செல்லும் இடமெல்லாம் உபயோகித்து கொள்வது போல செல்லுமிடமெல்லாம் இணைய இணைப்பு பெற இன்னும் ஐந்து வருடங்கள் ஆகலாம். அது போன்ற நேரத்தில்தான் கூகிள் குரோம் ஓஎஸ்சின் பயன்பாடு முழுமையாக கிடைக்கும்.

இணைய இணைப்பு இல்லை என்றால் கூகிள் குரோம் ஓஎஸ் எதற்கும் பயன்படாது.


புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் உடற்பயிற்சி

தினமும் தீவிரமாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு வியாதிகளால் ஏற்படும் பாதிப்புகள் கட்டுப்பாட்டில் இருந்தது தெரிய வந்துள்ளது.

கடின உடற்பயிற்சியானது அனைத்து வகைப் புற்று நோய் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தினாலும் குறிப்பாக நுரையீரல் மற்றும் இரப்பை புற்று நோய்க்கு நல்ல நிவாரணமாக இருக்கிறது.


இதற்காக தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் போதுமானது. அதாவது, மெதுவாக ஓடுதல், நீச்சல் பயிற்சி, படகு ஓட்டுதல் போன்றவற்றையும் சேர்த்து உங்கள் உடற்பயிற்சி அமைய வேண்டும்.

விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தால் கால்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளிலும் அரை மணி நேரம் ஈடுபடலாம்.

எதுவாக இருந்தாலும் ஓரிரு நாட்கள் செய்துவிட்டு பின்னர் விட்டுவிடுவதில் பயனில்லை. தொடர்ந்து செய்வதால் பலனுள்ளது என்கிறது மருத்துவ ஆய்வுகள்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review