December 13, 2009

பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம்

சாலையிலும் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக, அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகிறது. ஒரு கோடி ரூபாய் விலை கொண்ட இந்த கார், 2011ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த டெராப்யூஜியாஸ் எனும் நிறுவனம், பறக்கும் காரைத் தயாரிக்க உள்ளது.

இறக்கைகளுடன் தயாரிக்கப்படும் இந்தக் கார், சாலையில் செல்லும் போது சக்கரங்களையும், பறக்கும் போது, மடிக்கப் பட்ட இறக்கைகளை விரித்துக் கொண்டும் செல்லும். அதிக கனமில்லாமல், எளிதில் இயக்கக் கூடிய விளையாட்டு விமானம் போன்று காணப்படும் இந்த விமான காரை, பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் ஓட்டலாம்; இரண்டு பேர் பயணம் செய்யலாம். புறப்படும் இடத்தில் இருந்து சாலை வழியாக விமான நிலையம் வரை காராக செல்லும் இந்த வாகனம், விமான நிலையத்தில் இருந்து விமானம் போன்று விண்ணில் பறந்து செல்லும்.விமான நிலைய கட்டுப்பாட்டில் மற்ற விமானங்கள் இயங்குவது போலவே, இந்த கார் விமானமும் இயங்கும்.இந்த காரில் பலவித நன்மைகள் உள்ளன.

வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு சென்ற பின், அங்கு இந்த வாகனத்தை, "பார்க்கிங்' ஏரியாவில் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. பறந்து செல்லும் போது மோசமான வானிலை, புயல் காற்று போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டால், குறைந்த கால இடைவெளியில் சாலையில் இறங்கி விடலாம்.சாலையில் கார் சென்று கொண்டிருக்கும் போது, தேவைப்பட்டால் 30 வினாடிக்குள் பறக்கும் தன்மைக்கு மாறும்.

அரசிடம் முறையாக அனுமதி பெற்று விற்பனை செய்ய, கார் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. பறக்கும் காரின் மாதிரி, தற்போது அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்படும் இந்த நவீன கார், மிக விரைவில் சர்வதேச அளவில் அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் விலை, 95 லட்ச ரூபாய். வரும் 2011ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன அழுத்தத்தைக் குறைக்கும் முத்தம்!

பொதுவாக தம்பதியரிடையே முத்தம் கொடுத்தல், கட்டிப்பிடித்தல் போன்ற செயல்களால் அவர்களிடையே மன அழுத்தம் குறைவதாக சுவிட்சர்லாந்தில் வெளியான ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
கையோடு, கைசேர்த்து கட்டிப்பிடிப்பதால், ஆண்பெண் இருபாலரிடமும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் சுரப்பது குறைவதாக அந்த ஆய்வு கூறுகிறது.
சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் உள்ள சைக்கோஸொமேடிக் மருத்துவ இதழில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. நெருக்கமான உறவு கொள்தல், குறிப்பாக திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் பாலியல் உறவால் ஆரோக்கியமான உடல்நலம் ஏற்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஜெர்மனியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தம்பதியரை ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் சுமார் ஒரு வார காலம் அவர்களை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த முடிவை வெளியிட்டனர். தம்பதியர் ஒருவரை ஒருவர் கைகளை இறுகப்பற்றுவது முதல் பாலுறவு கொள்வது வரையிலான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதில் உடல் ரீதியான தொடர்பால், கார்டிசோல் எனப்படும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் சுரப்பது குறைவாக இருப்பது தெரிய வந்தது. உடலில் பல்வேறு மன அழுத்தம் தொடர்பான மாற்றங்களுக்கு கார்டிசோல் ஹார்மோனே காரணம் என்று கண்டறியப்பட்டது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review