November 15, 2009

எயிட்ஸ் வைரஸின் பரம்பரை ரகசியங்கள் வெளிப்பட்டன.


உலகில் மனித குலத்தை ஆட்டிப்படைத்து வரும் எயிட்ஸ் நோய்க்குரிய எச் ஐ வி -1 (HIV -1)(Human immunodeficiency virus) இன் பரம்பரை அலகுகளின் தொகுப்பு (genome) அமெரிக்க வடக்கு கரோலினா பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டு வெளிக் கொணரப்பட்டுள்ளது.

இதன் மூலம் விளங்கக் கடுமையாக உள்ள எச் ஐ வியின் செயற்பாடுகள், மாறல்கள் மற்றும் அதன் பெருக்கங்கள் தொடர்பான பரம்பரை அலகுகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் தெளிவாக விளங்கிக் கொள்ளப்பட்ட முடியும் என்றும் அதன் மூலம் எச் ஐ வியைக் கட்டுப்படுத்தும் மருந்துகளின் தயாரிப்பை மேலும் வினைத்திறனுடைய வகையில் வலுப்படுத்த முடியும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

எளிமையான மற்றைய வைரஸ்களின் ஜினோம்களோடு ஒப்பிடும் போது எச் ஐ வி- 1 சிக்கலான ஜினோம் தொகுப்பைக் கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறியுள்ளனர்.

எச் ஐ வி - 1 டி என் ஏ (DNA) இரட்டைச் சங்கிலி அமைப்பில் பரம்பரைத் தகவல்களைச் சேர்த்து வைக்கும் வைரஸ் அல்ல. அது ஆர் என் ஏ (RNA) எனப்படும் ஒற்றைச் சங்கிலி அமைப்பில் தகவல்களை சேகரித்து வைப்பதால் அதன் பரம்பரை அலகுகளின் தொடர்ச்சியை ஆராய்ந்து வெளிப்படுத்துவது என்பது சிக்கலானதாக இருந்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

கொரில்லாவில் இருந்து மனிதனுக்கு தொற்றிய புதிய எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிப்பு


மனிதரில் எயிட்ஸ் நோயைத் தோற்றுவிக்கும் HIV-1 வைரஸிற்கு ஒத்த கொரில்லாவில் (Gorillas) இருந்து மனிதனிற்கு தொற்றியிருக்கக் கூடியது என்று கருதப்படும் புதிய எயிட்ஸ் வரைஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வைரஸ் தொற்றுடன் பிரான்ஸ் பாரீசில் வாழும் கமரூன் நாட்டைச் சேர்ந்த 62 வயதுடைய பெண்ணொருவர் இனங்காணப்பட்டுள்ளார். இவரே இவ்வகை வைரஸின் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ள முதல் மனிதனும் ஆவார்.

இவர் கமரூன் நாட்டில் ஒதுக்குப்புற கிராமத்தில் வாழ்ந்திருந்தாலும் கொரில்லாக்களோடு எந்த வித நேரடித் தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருந்தாலும் கொரில்லா அல்லது சிம்பன்சிகளின் இறைச்சிகளை உண்ணும் அல்லது தொடர்புகளைக் கொண்டிருக்கும் வேறு மனிதர்களிடம் இருந்து இவருக்கு இந்தத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

HIV கள் சிம்பன்ஸிகளில் (chimpanzees ) காணப்படும் SIV (Simian Immunodeficiency Virus ) வைரஸிகளின் வகைகள் என்றும் எச் ஐ வி கூட சிம்பன்ஸிகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்றி இருக்கலாம் என்றே இது நாள் வரை கருதப்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்போது இந்த புதிய வைரஸின் கண்டுபிடிப்பானது எச் ஐ வி கொரில்லாக்களில் இருந்தும் மனிதருக்கு தொற்றி இருக்கக் கூடும் என்ற நோக்கிலும் உயிரியல் மருத்துவ ஆய்வாளர்களைச் சிந்திக்கச் செய்துள்ளது.

இந்த புதிய வகை வைரஸை எச் ஐ வியின் பெருக்கத்தை கட்டுப்படுத்தக் கூடிய மருந்துகள் கொண்டு கட்டுப்படுத்த முடியாது என்று நம்புவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்ற அதேவேளை இந்த வைரஸ் தொற்றுக் கொண்ட பெண்மணி எயிட்ஸ் நோய்க்குரிய எந்தக் குணங்குறிகளையும் காண்பிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

விரைந்து கூர்ப்படையக் கூடிய எயிட்ஸ் வைரஸுக்கள் மனிதன் மற்றும் பழைய உலகுக் குரங்குகள் அடங்கும் பிரைமேட்டு வகை உயிரினங்களுக்கிடையே இனம் விட்டு இனம் தொற்றக் கூடியவனவாக விளங்குகின்றன.

சமீபத்தில் தான் ஆபிரிக்கர்கள் மத்தியில் எயிட்ஸ் வைரசிஸிற்கு எதிரான தடுப்பூசிகள் பரிசோதனை ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்டன என்பதும் ஆபிரிக்காவிலேயே உலகில் அதிக எயிட்ஸ் நோயாளிகள் வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆபிரிக்காவை அடுத்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் அடங்கும் ஆசியப் பிராந்தியம் அதிக எயிட்ஸ் நோயாளிகளைக் கொண்டிருக்கிறது.

ரோபோ தொழில்நுட்பத்தில் இருதய அறுவை சிகிச்சை


ரோபோ உதவியுடன் இரண்டு பேருக்கு இருதய அறுவை சிகிச்சையை சென்னை மருத்துவர்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இருதய அறுவை சிகிச்சையில் இது ஒரு முக்கியமான திருப்பம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரோபோ உதவியுடன் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையினால் நோயாளிகளுக்கு சில வசதிகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இம்முறையை பயன்படுத்துவதால் நோயாளிக்கு வலி குறையும் என்றும், அறுவை சிகிச்சையின் போது விரையமாகும் இரத்தத்தின் அளவும் கட்டுபபடுத்தப்படுவதால் இது நோயாளிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

இந்த அறுவை சிகிச்சை முறையில் சென்னையில் உள்ள செட்டிநாடு ஹெல்த் சிட்டி மருத்துவமனை மருத்துவர்கள் இரண்டு இளைஞர்களுக்கு இருதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சையின் போது குறைந்த அளவு திசுக்களே சேதமடைவதால் குறைந்த அளவே இரத்த விரையம் ஏற்படுகிறது. இதனால் நோயாளிக்கு குறைந்த அளவே இரத்தம் செலுத்தினால் போதுமானது.

இந்த சிகிச்சை முறையினால் குறைந்த அளவு பகுதிகள்தான் பாதிக்கப்படுகின்றன. அதனால் அறுவை சிகிச்சையின் போது போடப்படும் தையல் உறுதியாகவும் இருக்கும் என்று இம் மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்

மலேரியாவை ஒழிக்க புதிய தடுப்பு மருந்து


அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் மலேரியா ஆராய்ச்சிக் கழகத்தைச் சேற்ந்த ஆயாளர்கள் குழு இந்திய விஞ்ஞானி தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் மலேரியா நோயைத் தடுக்கும் புதிய தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.

பரிசோதனையில் இந்த மருந்து சிறப்பாக செயல்பட்டதாக இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

மலேரியா நோய் உலகம் முழுதும் 50 கோடி மக்களை தாக்கி வருகிறது. ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் பேர் உலகம் முழுதும் மலேரியாக் காய்ச்சலுக்கு உயிரிழந்து வருகின்றனர்னர்.

குறிப்பாக ஆப்பிரிக்கா நாட்டு குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். ஆசியாவிலும் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆய்வை தலைமையேற்று நடத்திய நிர்பாய் குமார், இது குறித்து கூறுகையில், "மலேரியா வைரஸ் பரவலைத் தடுக்கும் இந்த புதிய தடுப்பு மருந்தை எலிகளுக்குள் செலுத்‌தி பரிசோதனை மேற்கொண்டபோது, கிடைத்த முடிவுகள் ஆரோக்கியமானதாக இருந்ததால் அதனை மனித உடலுக்கும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது" என்றார்.

அதாவது இந்த ஆய்வாளர்கள் மலேரியல் புரோட்டீனை தயாரித்து அதனை எலிகள் மற்றும் கென்யாவில் உள்ள ஆலிவ் குரங்கினங்கள் ஆகியவற்றை வைத்து பரிசோதனை செய்தனர். அப்போது கொசுவின் உடலில் வளரும், மலேரியா உருவாக்கு‌ம் பிளாஸ்மோடியம் என்ற ஒட்டுண்ணியின் வளர்ச்சியை இந்த தடுப்பு மருந்து சிறப்பாக முடக்கியது தெரிய வந்ததாக இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொசுவில் உருவாகும் இந்த ஒட்டுண்ணி பல்கிப் பெருகுவதன் மூலம் மனித உடலுக்குள் புகுந்து விடுகிறது. தற்போது இந்த மலேரியா தடுப்பு புரோட்டீன் இந்த வளர்ச்சியை தடுத்து விடுகிறது.

இந்த புரோட்டீன் வாக்சின் ஒரே ஒரு டோஸ் கொடுக்கப்பட்டபோது 93 விழுக்காடு எதிர்ப்பு சக்தி உருவானதாக கூறப்பட்டுள்ள இந்த ஆய்வில் நாளைடைவில் மலேரியா எதிர்ப்பு சக்தி 98 விழுகாடாக அதிகரித்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் மலேரியா ஒழிப்பு முயற்சியில் இது ஒரு தொடக்க கட்டமே என்று கூறியுள்ள ஆய்வாளர்கள், மேலும் பல சீரிய ஆய்வுகளை மேற்கொண்டு இதில் முன்னேற்றம் ஏற்பட்டால் மலேரியா நோயையே அகற்றி விடலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வெப்பநிலை,காற்றழுத்த மாற்றத்தால் ஒற்றைத் தலைவலி உண்டாகிறது


தலைவலியும்,காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்பார்கள்". தலைவலியால் அவதிப்படாத மனிதர்களே இருக்கமுடியாது என்பதால் தலைவலி தொடர்பான ஆராய்ச்சிகள் உலகெங்கும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

தலைவலியில்,ஒற்றைத் தலைவலி எனப்படும் "மைகிரேன்"தலைவலியால் அவதிப்படுவோர் பலர்.இத்தகைய வலி வந்தால் எதுவுமே செய்ய இயலாது.சிலருக்கு இரண்டு மூன்று நாள் வரை கூட இது நீடிக்கும்.தலையில் நீர் கோர்ப்பதால் இந்த மைகிரேன் தலைவலி வருவதாக கூறப்பட்டாலும்,தட்ப வெப்ப நிலை மற்றும் போதிய காற்று இல்லாததாலும் மைகிரேன் தலைவலி வரும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வெப்ப நிலை திடீரென உயர்வதால் தலைவலி உண்டாகும் என்றும் காற்றழுத்த வேறுபாடு காரணமாக தலைவலி ஏற்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இஸ்ரேலைச் சேர்ந்த நரம்பியல் டாக்டர் சேத் தலைமையிலான மருத்துவக் குழு கடுமையான தலைவலியால் அவதிப்படும் 7,054-பேரை ஆய்வு செய்தது.இவர்களில் பெரும்பாலோர் 7-ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறினர்.இதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது,தட்ப வெப்ப நிலையில் முந்தைய தினத்தைக் காட்டிலும் 5-டிகிரி செல்சியஸ் உயரும்போது இவர்களுக்கு கடும் தலைவலி ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.அத்துடன் காற்றழுத்தத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக 72-மணி நேரம் வரை லேசான தலைவலியுடன் இவர்கள் அவதிப்பட்டதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இத்தகைய ஆராய்ச்சி முடிவு மிகவும் உபயோகமானது என்று லண்டனில் உள்ள நரம்பியல் துறை பேராசிரியர் பீட்டர் கோட்ஸ்பி தெரிவித்துள்ளார்.இதன்மூலம் நோயாளிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க முடியும்.மைகிரேன் தலைவலியை அதிகரிக்கும் காரணிகளில் சில வகை உணவு மற்றும் மதுப் பழக்கம் மட்டுமின்றி மன இறுக்கமும் காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review