எல்லோரும் இண்டெர்நெட்டில் பழைய காதலிகளையும் காதலன்களையும் தேடிக்கொண்டிருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஆஸ்க்ஜீவ்ஸ் தேடியந்திரம் சார்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.இந்த ஆய்வின் படி இண்டெர்நெட் பயன்படுத்துபவர்களில் பாதிபேர் தஙளுடைய முன்னாள் காதலன்/காதலிகளை தேடுகின்றனராம்.
ஃபேஸ்புக் ,டிவிட்டர் போன்ற வலைப்பின்னல் தளங்களின் மூலம் அந்தரங்க விவரங்களை பகிர்ந்து கொள்வதும் நண்பர்களை தேடுவதும் சுலபமாக இருக்கிறது.தொடர்பு விட்டுப்போன பழைய நண்பர்களை தேடவேண்டும் என்றால் இந்த தளங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதே போலவே பலரும் தங்களது பழைய காதலர்களை தேடிக்கண்டுபிடிக்க முயல்வதாக தெரிய வந்துள்ளது.ஆனால் அவர்கள் தேடுவதற்கான காரணங்கள் தான் உண்மையிலேயே சுவாரஸியமானவை.
37 சதவீதம் பேர் முன்னாள் காதலர்கள் தற்போது எப்படி இருக்கின்றனர் என்று தெரிந்து கொள்வதற்காக மட்டுமே தேடலில் ஈடுபடுகின்றனராம்.மற்றபடி பழைய காதலை புதுப்பித்துக்கொள்ளும் விருப்பம் எல்லாம் அவர்களிடம் இல்லையாம்.அது மட்டுமல்ல 20 சதவீதம் பேர் மாஜிக்களிடமிருந்து வந்த இமெயில்களுக்கு பதில் அளிப்பதைகூட தவிர்த்துள்ளனர்.
இதில் மேலும் வியப்பு என்னவென்றால் கணிசமானோர் தாங்கள் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை உணர்த்தவே மாஜிக்களை தேடுகின்றனராம்.இந்த ஆய்வு தமிழ் திரைக்கதையாசிரியர்களுக்கு நல்ல தீனி அல்லவா?