February 01, 2010

ஹேக்கர்களின் புதிய இலக்குகள்

கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி வரும் மேக் அபி நிறுவனப் பிரிவு, இந்த ஆண்டில் அடோப் பிளாஷ் மற்றும் அடோப் அக்ரோபட் ரீடர் தொகுப்புகளை வைரஸ் மற்றும் பிற நாசவேலை புரோகிராம்கள் தங்கள் இலக்காகக் கொள்ளலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த சைபர் கிரிமினல்கள் இதுவரை மைக்ரோசாப்ட் சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்களைத்தான் தங்கள் இலக்காக வைத்துச் செயல்பட்டு வந்தனர். அதில் உள்ள பிரச்னைக்குரிய இடங்களைக் கண்டறிந்து, அவற்றின் மூலம் வைரஸ் களையும், மால்வேர்களையும் அனுப்பி நாசவேலைகளை மேற்கொண்டு வந்தனர். ஏனென்றால் இவைதான் கம்ப்யூட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் இப்போது பிளாஷ் மற்றும் அடோப் அக்ரோபட் ரீடர் போன்றவை அதிகம் பயன்படுத்தப்படுவதால், இவர்களின் கவனம் இவற்றின் பக்கம் திரும்பியுள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் தொகுப்புகளைச் சரியான பாதுகாப்பு வளையத்தில் அமைத்து வருகிறது. 

அடோப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தங்கள் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மீது ஹேக்கர்களின் கவனம் திரும்பி இருப்பதனையும், பலர் புதிய மால்வேர் புரோகிராம்கள் மூலம் தங்கள் புரோகிராம்களுக்குள் புக முயற்சிப்பதனையும் ஒத்துக் கொண்டுள்ளார். அதற்கேற்ற வகையில் அவற்றை முறியடிக்க தங்கள் நிறுவனம் பேட்ச் பைல்களைத் தந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இவற்றுடன் மொஸில்லா நிறுவனத்தின் பயர்பாக்ஸ் பிரவுசர் மற்றும் ஆப்பிள் நிறுவனத் தின் குயிக் டைம் புரோகிராமில் இத்தகைய தாக்குதல்கள், அண்மைக் காலங்களில் அதிகமாகி உள்ளதையும் மேக் அபி நிறுவனம் கண்டறிந்து தெரிவித்துள்ளது. 

மேலும் இது பற்றிக் கூறுகையில், சோஷியல் நெட்வொர்க் தளங்களான பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களிலும் இந்த தாக்குதல் அதிக அளவில் இந்த ஆண்டு இருக்க வாய்ப்புகள் உண்டு எனவும் தெரிவித்துள்ளது. 

ஆனால் பன்னாட்டளவில் இது குறித்த விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளதால், இந்த சைபர் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டு அமலாக்கப்பட இருக்கின்றன. எனவே இந்த வகை குற்றங்கள் குறையவும் வாய்ப்புகள் உள்ளன.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review