December 16, 2009

மனிதனின் மரபணுப் பட்டியல் : இந்திய விஞ்ஞானிகள் சாதனை

ஒவ்வொரு மனிதனின் குணாதிசயம், செயற்பாடுகள், திறமை, நிறம், தோற்றம், நோய் உள்ளிட்டவற்றுக்கு அவனது மரபணுக்களே காரணமாக இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனின் மரபணுவுக்கும், அவனது தந்தையின் மரபணுவுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.

தந்தையின் மரபணுப் பட்டியலில் ஏதாவது ஓரிடத்தில் நோய் இருந்தால், அவரது மகனுக்கும் அந்த நோய் தாக்க வாய்ப்புள்ளது. மரபணுப் பட்டியல் இருந்தால், மகனுக்கு முன்கூட்டியே மருந்து கொடுத்து அந்த நோயை தடுத்து விடமுடியும்.


இத்தகைய சிறப்பு வாய்ந்த மரபணு பட்டியலைத் தயாரிப்பது மிகவும் கடினம். இருப்பினும், அமெரிக்கா, பிரிட்டன், கனடா, கொரியா, சீனா உட்பட 14 நாடுகள் தனித்தனியாக இப்பட்டியலைத் தயாரித்து சாதனை புரிந்துள்ளன.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்ஸிலைச் (சி.எஸ்.ஐ.ஆர்.) சேர்ந்த மரபணு விஞ்ஞானிகள், மரபணுப் பட்டியலைத் தயாரிக்கும் பணியைத் தொடங்கினர். 9 வார தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு மனிதனின் மரபணுப் பட்டியலைத் தயாரித்து சாதனை படைத்துள்ளனர். இத்தகவலை சி.எஸ்.ஐ.ஆர். தலைவர் சமீர் பிரம்மச்சாரி டில்லியில் தெரிவித்தார்.

இந்திய விஞ்ஞானிகளின் இச்சாதனைக்கு துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி பாராட்டு தெரிவித்துள்ளார். இச்சாதனை குறித்து நாடாளுமன் றத்தின் இரு அவைகளிலும் மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பிருதிவிராஜ் சவான் அறிவித்தார். விஞ்ஞானிகளுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார். இச்சாதனை காரணமாக மரபணுப் பட்டியல் தயாரித்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review