December 03, 2009

'சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள்

இந்தியாவில் இருந்து நிலாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 'சந்திரயான் -1' செயற்கை கோள் மூலமாக நிலவில் உள்ள கனிம வளங்கள் பற்றிய தகவல் கிடைத்து இருப்பதாக விஞ்ஞானி அண்ணாதுரை தெரிவித்தார்.

நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக, இந்தியாவில் இருந்து முதன் முறையாக 'சந்திரயான்-1' என்ற செயற்கை கோள் அனுப்பி வைக்கப்பட்டது. நிலாவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்து ஆராய்ச்சி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட அந்த செயற்கை கோளில் 11 கருவிகள் இருந்தன. அவை அனைத்தும் வெவ்வேறு பணிகளை மேற்கொண்டு ஏராளமான தகவல்களை அளித்தன.


திட்டமிட்ட இரண்டு ஆண்டு காலத்துக்கு முன்னதாகவே 'சந்திரயான் -1' செயலிழந்தது. எனினும், அது அனுப்பிய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில், நிலவை ஆராய்ச்சி செய்யும் 'சந்திரயான் -1' திட்டத்தின் இயக்குனர் விஞ்ஞானி அண்ணாதுரை, நேற்று பெங்களூரில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சந்திராயானில் இருந்த 11 கருவிகளின் மூலமாக 'ஏழு தேரா பைட்' தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை 'இஸ்ரோ' விஞ்ஞானிகள் குழு ஆராய்ச்சி செய்து வருகிறது. மிகப்பெரிய அளவில் கிடைத்துள்ள அந்த விபரங்களை பகுப்பாய்வு செய்து முடிப்பதற்கு மூன்று ஆண்டுகள் ஆகும். தற்போது, நிலவில் உள்ள கனிம வளங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்கின்றனர்.

அந்த ஆராய்ச்சி முடிந்ததும் அறிவியல் முடிவுகள் வெளியிடப்படும். அதை சர்வதேச அளவிலான விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்த பிறகு அறிவியல் குறித்த சஞ்சிகைகளில் அவை பிரசுரிக்கப்படும். ஒட்டு மொத்த நிலவிலும் உள்ள கனிம வளங்கள் குறித்து ஒரு வரைபடம் எங்களுக்கு கிடைத்துள்ளது. அதில் தண்ணீர் உட்பட பல்வேறு கனிமங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அது பற்றி முழு தகவலையும் ஆய்வு செய்த பிறகு புதிய தகவல்களை இந்த உலகுக்கு தெரிவிப்போம்.

நிலவின் மேற்புறத்தை முப்பரிமான வடிவத்தில் சந்திரயான் படம் பிடித்து அனுப்பி இருக்கிறது. நிலவை சுற்றிலும் நிலவும் சூரிய கதிரியக்கம் மற்றும் அவற்றால் நிலவில் ஏற்படும் விளைவுகள் போன்ற தகவல்களும் கிடைத்துள்ளன. அவற்றையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். சந்திரயானில் இருந்த ஒவ்வொரு கருவிகளும் அனுப்பிய தகவல்களை தலா 20 முதல் 30 விஞ்ஞானிகளை கொண்ட 11 குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.

முற்றிலுமாக பகுப்பாய்வு செய்த பிறகு, அந்த முடிவுகளை விரைவில் அறிவிப்போம். மேலும், அது குறித்த தகவல்களை முன்னதாகவே தெரிவிப்பதற்காக, நாடு முழுவதும் ஆங்காங்கே கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி கூடங்களையும் `இஸ்ரோ` நடத்தி வருகிறது. அதன் மூலமாக, `இஸ்ரோ`வில் இல்லாத விஞ்ஞானிகளும் சந்திரயான் அளித்த தகவல்களை பெற்று பலனடைய முடியும்.

அடுத்த கட்டமாக, வருகிற 2013-ம் ஆண்டில் 'சந்திரயான் -2' விண்கலம் விண்ணுக்கு செல்கிறது. 'சந்திரயான் -2' திட்டத்துக்கான யுக்திகள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டு விட்டன. விண்கலத்தின் அமைப்பு குறித்த வரைபடம் தயாராகி விட்டது. அடுத்த ஆண்டில் (2010) அந்த விண்கலம் தயாரிக்கப்படும்.

ரூ.424 கோடி திட்ட செலவில் உருவாகியுள்ள 'சந்திரயான் -2' திட்டத்தின் மூலமாக அனுப்பப்படும் விண்கலத்தில் இரண்டு 'ரோவர்கள்' இடம்பெறும். அவை நிலவில் இறங்கி ஆராய்ச்சி செய்யும். ரஷ்யா உதவியோடு அந்த 'ரோவர்கள்' தயாரிக்கப்படுகின்றன.

இவ்வாறு அண்ணாதுரை தெரிவித்தார்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review