December 29, 2009

உலகில் முதலாவதாக ஏழுவகை இதய குறைபாடுகளுக்கு ஒரே ஆபரேஷன்

உலகிலேயே முதல் முறையாக இதயத்தில் ஏற்பட்ட ஏழுவிதமான கோளாறுகளை ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து சென்னை, மியாட் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்தவர் நாராயணசாமி (53). மருந்து கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி. நாராயணசாமிக்கு பிறவியிலேயே இதய பாதிப்பு இருந்தது. இதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை. கடந்த மாதம் அவருக்கு அதிகமான மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனைக்கு வந்தார். நாராயணசாமியை, மியாட் மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாஷி பரிசோதித்தார். இதில், அவருக்கு இரண்டு பெரிய ரத்த நாளங்கள் மகாதமணியில் இருந்து ரத்தத்தை நுரையீரலுக்கு கொண்டு செல்வதும், "வென்ட்ரிக்கல் செப்டம்' எனப்படும் இதய அறைகளுக்கு இடையே துளை இருப்பதும், "ஏட்ரியல் செப்டம்' எனப்படும் இதய அறைகளுக்கிடையே மேலும் ஒரு துளை இருப்பதும், இதயத்தின் வலதுபுறத்தில் அதிக சதை வளர்ந்திருப்பதும், பல்மோனரி வால்வு இல்லாமை மற்றும் அதனால் ஏற்படும் ரத்தக்கசிவு, மகாதமணியில் ஆணுவரிசம் எனப்படும் பெரிய மகாதமணி அழற்சி நோய், அதிக கால்சியம் படிந்த ரத்தம் கசியும் அயோர்டிக் வால்வு என ஏழு குறைபாடுகள் நாராயணசாமியின் இதயத்தில் கண்டறியப்பட்டன.


டாக்டர் பாஷி தலைமையில் டாக்டர்கள் ஹரிலால், கண்ணன், சிவகுமார், அஜிஜேக்கப், ஜோட்ஸ்னா ஆகியோர் அடங்கிய குழுவினர் ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை மூலம் ஏழுவிதமான குறைபாடுகளையும் சரிசெய்தனர். உலகிலேயே முதல் முறையாக இதுபோன்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. நாராயணசாமி தற்போது நலமாக உள்ளார்.

மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மோகன்தாஸ் கூறுகையில்,
"இதயத்தில் ஏற்பட்டிருந்த ஏழுவிதமான குறைபாடுகளை ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து மியாட் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். மியாட்டில் உள்ள அறுவை சிகிச்சை அரங்குகள் நவீனமாக்கப்பட்டுள்ளன. இதனால், சிக்கலான அறுவை சிகிச்சைகள் கூட வெற்றிகரமாக செய்யப்படுகின்றன,' என்றார்.

டாக்டர் பாஷி கூறியதாவது,

நாராயணசாமிக்கு அதிக மூச்சுத்திணறல் இருந்ததால், அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 8ம் தேதி அவருக்கு, அதிக ஆபத்து கொண்ட அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது, மகாதமணியில் இருந்து நுரையீரலுக்கு ரத்தம் கொண்டு செல்லும் நாளங்களை சரிசெய்வது மிகவும் கடினம். இந்த சிகிச்சை "கேத்லேப் கத்திடரைசேசன்' முறையில் அளிக்கப்பட்டதால் ஆபத்து தவிர்க்கப்பட்டது. பின், இரண்டு அசாதாரண ரத்த நாளங்கள் நுரையீரலுக்கு ரத்தம் செலுத்துவது அடைக்கப்பட்டது. பின், வென்ட்ரிக்கல் செப்டம் எனப்படும் இதய அறைகளுக்கிடையேயான துளை அடைக்கப்பட்டது. அடுத்ததாக ஏட்ரியல் செப்டம் எனப்படும் இதய அறைகளுக்கிடையேயான துளை சரிசெய்யப்பட்டது. இதயத்தில் வலதுபுறம் இருந்த அதிகப்படியான தசைகள் அகற்றப்பட்டன. பல்மோனரி வால்வு மாற்றியமைக்கப்பட்டது.

மகாதமணி அழற்சியை, செயற்கை தமணி மூலம் சரிசெய்து, இதய ரத்த நாளங்கள் மறுபடியும் இணைக்கப்பட்டது. ஆயோர்டிக் வால்வு மாற்றியமைக்கப்பட்டது. மொத்தம் 6 மணி நேரம் கொண்ட இந்த அறுவை சிகிச்சையின் போது, எட்டு யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டது. உலகிலேயே முதல் முறையாக ஏழுவிதமான குறைபாடுகள் ஒரே நேரத்தில் சரிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு டாக்டர் பாஷி கூறினார்.

சுகமான தூக்கம், சுறுசுறுப்பான விழிப்பு

அதிகாலைத் தூக்கம் ஆனந்தம் தரும் ஆழ்ந்த உறக்கமாக இருக்கும். வெயில் சுள்ளுன்னு முகத்தில் விழுந்தபிறகுதான் எழத்தோன்றும். இல்லாவிட்டால் பசி வயிற்றைக் கிள்ளிய பிறகு எழுவோம்.

அப்படி இருக்கும்போது, அதிகாலையில் அலாரம் வைத்து எழுப்பினால் எப்படி இருக்கும்? சத்தம்போட்ட கடிகாரத்துக்கு உச்சி மண்டையில் ஒரு தட்டு. செல்போனுக்கும் அதே கதிதான். மீண்டும் தூக்கத்துக்குள் புகுந்து சொர்க்கப் பிரவேசம் செய்வோம்.


இனி அப்படி தூக்கத்தைக் கெடுத்து எழவேண்டாம். உங்கள் உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைத்தபிறகு எழுப்பிவிடும்படியான `அலாரம்' உருவாக்கிவிட்டோம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இந்தக்கருவி கடிகாரம் வடிவில் இருக்கிறது. இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஸ்லீப்டிராக்கர் எனப்படும் இந்தக்கருவியை கையில் கட்டிக் கொண்டு படுத்தால்போதும். நமது ஆழ்ந்த தூக்கத்தை கெடுக்காமல் போதுமான ஓய்வு கிடைத்தபிறகு எழுப்பிவிடுமாம். மற்றவற்றை ஆய்வாளரே கூறுகிறார்...

இதுவரை தூக்கத்தில் இருந்து எழுப்பிவிடும் கடிகாரம், செல்போன்கள் போன்றவை குறிப்பிட்ட நேரம் முடிந்ததும் எழுப்பிவிடும். இதனால் நிம்மதியான உறக்கம் கெடும். திடீரென்று எழுவதால் மன அழுத்தம், தோல் பாதிப்பு, சோர்வு என பல பாதிப்புகள் ஏற்படும்.

ஆனால் எங்களது உடற்கடிகாரம் (பாடிகிளாக்) தூக்கத்தின் அளவை கண்காணிக்கும். மூளையானது மெலட்டானின் என்னும் ரசாயனம் சுரப்பதை நிறுத்தத் தொடங்கிவிட்டால் உடலுக்கு போதுமான ஓய்வு கிடைத்துவிடும். அதை கண்காணித்து இந்தக்கருவி நம்மை எழுப்பிவிடும். இதில் ஏற்படும் அதிர்வுகள் 7-9 ஹெர்ட்ஸ் வரை இருப்பதால் வேறு பாதிப்புகளும் ஏற்படாது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review